பேணுதலை கடைபிடிப்போம், பேரின்பத்தை பெற்றுகொள்வோம்
أخرجه الترمذي (2442) ، وأحمد (1630) ، وابن حبان (722) عن الحسن بن علي رضي الله عنهما قال : " حفظت من رسول الله صلى الله عليه وسلم : ( دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ .
எதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதோ அதை [ பேணுதலுடன்] விட்டு விடுங்கள். எதில் சந்தேகம் இல்லையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு முஃமினின் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் பேணுதலை கடைபிடிப்பதும், பேணுதலாக இருப்பதும் அவசியமான ஒன்று.
அமலில்(அதை முறையாக செய்வதில்) பேணுதல், உணவு உடைகளில் (ஹராமை விட்டு) பேணுதல், சக மனிதர்களின் உரிமைகளை கையாளும் விஷயத்தில் பேணுதல் என வாழக்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் பேணுதலை கடைபிடிப்பது முஃமினான நமக்கு கடமை ஆகும்.
அவ்வாறு பேணுதலின்றி ,அல்லாஹ் வகுத்த வரைமுறைகளை சரியாக பேணாமல் தான்தோன்றி தனமாக வாழ்வது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நஷ்டத்தையே பெற்று தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
வரலாற்றில் நம் மேன்மக்கள் கடைபிடித்த பேணுதலான வாழ்க்கையை பார்த்தால்,படித்தால் நம் வாழ்கையின் ஒவ்வொரு அம்சங்களும் தவறோ என்று நினைக்க தோன்றும் அளவு பேணுதலான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்.
அப்படிபட்ட பேணுதலான வாழ்க்கையை தான் அவர்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளையும் மறுமையின் நற்பேறுகளையும் பெற்றுக்கொடுத்தது.
قال ابن القيم رحمه الله :
والورع ترك ما يخشى ضرره في الآخرة
இப்னுல் கய்யூம்(ரஹ்) அவர்கள் சொல்வார்கள் :
பேணுதல் என்பது மறுமையில் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒவ்வொன்றையும் விடுவதாகும்.
ஆம் உண்மைதான் நாம் மறுமையின் சொந்தக்காரர்கள் இம்மையின் பேணுதலான வாழக்கையே மறுமையில் பேரின்பத்தை பெற்று தரும்.
அமலில் பேணுதல் வேண்டும்
ஒரு சமயம் நபிதோழர் ஒருவர், "தக்பீர் தஹ்ரீமா' முதல் தக்பீரை ஒரு வியாபார விஷயமாக இருந்த போது தவறவிட்டு, ஜமா அத் தொழுகையில் கலந்து கொண்டார்.
தொழுகை முடிந்தபின் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ""பெருமானாரே! நான் தக்பீர் தஹ்ரீமாவை தவற விட்டுவிட்டேன்.
அதற்கு ஈடாக நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் நான்கு ஓட்டகைகளின் சாமான்களை ஈடாக கொடுப்பதால் தக்பீர் தஹ்ரீமாவின் நன்மை கிடைக்குமா?'' என்று வினவிய போது,
திருநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ""நான்கு ஒட்டகைகளின் சாமான்கள் என்ன, நாற்பது ஒட்டகைகளின் சாமான்களை நீர் தருமமாகக் கொடுத்தாலும் தக்பீர் தஹ்ரீமாவுக்கு ஈடாகாது'' என்று கூறினார்கள்.
அமலில் பேணுதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.
சின்ன விஷயம்தானே என்று நாம் பேணாத விஷயம் பின்னர் எவ்ளோ கோடி கொட்டி கொடுத்தாலும் அந்த சின்ன விஷயத்தின் உயர்ந்த நன்மையை அடைவது மிக கடினமே...
பைத்துல் மால் எனும் பொது நிதிகளை கையாளும் போது பேணுதல்
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.
(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) முதன் முதலாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு (பொதுநிதியிலிருந்து) நான்காண்டுகளுக்கு நான்காயிரம் (திர்ஹம்) தீனார்) கொடுக்க வேண்டுமென நிர்ணயித்தார்கள்.
(தம் மகனான) எனக்கு மூவாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் என நிர்ணயித்தார்கள்.
அவர்களிடம், '(தங்கள் மகன்) இப்னு உமர் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒருவர் தாமே! நான்காயிரம் கொடுக்காமல் அவருக்கு மட்டும் ஏன் குறைத்து நிர்ணயித்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், 'அவரை அழைத்துக் கொண்டு ஹிஜ்ரத் செய்து வந்ததெல்லாம் அவரின் தாய் தந்தையர் தாம்' என்று கூறினார்கள்.
'அவர் சுயமாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களைப் போன்றவரல்லர்' என்றும் உமர்(ரலி) சொல்வார்கள்.
இன்று பொது சொத்துகளை கையாள்பவர்கள் தங்களுக்கும் ,தங்களை சர்ந்தவர்களுக்கும் போக மீதியே பொது சொத்தென எண்ணுகிறார்கள்..
அதில் பேணுதலை கையாள்வது என்பது மிக அவசியம்...
இந்த சம்பவத்தில் நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது .
நமக்கு இவ்விடத்தில் பெற வேண்டியது
நாட்டின் ஜனாதிபதி, அமீருல் முஃமினின் பல மைல் சதுர பரப்பளவின் நீதமிகு ஆட்சியாளர் ஒரு இடம் பெறும் விஷயத்தில் எவ்வளவு பேணுதலை கடைபிடித்துள்ளார்கள்..
இன்று சாதாரண பதவியோ பணபலமோ, ஆள் அதிகாரமோ கிடைத்தால் அவர் சொல்வதுதான் சட்டம், அவர் தேர்வு செய்வதுதான் அவர் இடம் என்ற அளவில் நம் சமுதாய மக்களிடையே பேணுதலை பற்றி உண்டான எந்த கவலையும் இல்லாமல் வாழ்கிறோமே...
சிந்திக்க கடைப்பட்டுள்ளோம்.
உணவில் பேணுதலாக இருந்த உயர்ந்த உத்தமர்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
ஹஜ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு ஓர் அடிமை இருந்தார் அவர் எப்பொழுதும் ஏதாவது உணவு கொண்டு வந்தால் அதை முதலில் தன் எஜமானரான ஹஜ்ரத் அபூ பக்கர் (ரலி) அவர்களுக்கு கொடுத்து விட்டு சாப்பிடுவார்.
ஒரு நாள் அந்த அடிமை ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தார்.
அதிலிருந்து அபூபக்கர்(ரலி) சிறிது உண்டார்கள்.
அப்போது அந்த அடிமை அவர்களிடம்,
எப்பொழுதும்உணவு கொடுக்கப்பட்டால் விசாரிப்பீர்கள். இன்று எதுவும் விசாரிக்காமல் சாப்பிட்டிர்களே என்று கேட்டார்.
'பிறகு இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்
ஹஜ்ரத் அபூ பக்கர்(ரலி), 'இது என்ன?' என்று கேட்டார்கள். அவன், 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்" என்று சொன்னார்.
உடனே ஹஜ்ரத் அபூ பக்கர்(ரலி) தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள். வாந்தியெடுத்த பிறகு கூறினார்கள். யாஅல்லாஹ் இதையும் தாண்டி என் குடலுக்குள் அதனுடைய சாறு கலந்திருந்தால் என்னை மன்னிப்பாயாக. இந்த செய்தியை நபியிடம் சொன்னபோது உண்மையாளரின் வயிற்றுக்குள் தூய்மையான உணவைத்தவிர வேரெதுவும் செல்ல முடியாது என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3842.மற்றும்.இஹ்யா உலூமித்தீன்.பாகம்.2.
ஒரு கவலம் உள்ளே சென்றாலும் அது ஹலால் ஆன முறையில் செல்ல வேண்டும் என்ற பேணுதலும், ஹராமில் வளர்க்கப்பட்ட ஒரு சதையாக இருந்தாலும் அது நரகத்திற்கு சொந்தம் என்ற பயமும் அவர்களுக்குள்ளே இருந்த ஈமானின் அடையாளங்கள்.
மனிதன் நிரப்புகிற பாத்திரத்தில் மிக கெட்ட பாத்திரம் "வயிறு" என்று சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஆகவே அந்த வயிற்றை நிரப்ப உதவும் உணவுகளில் நாம் பேணுதலாக இருப்பது மிக அவசியம்.
பேணுதலை பேணிய அமீருல் முஃமினீன்
ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மரண நேரத்தில் தன் மகனார் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்களை அழைத்து,
அன்னை ஆயிஷா அவர்களிடம் நீ சென்று, 'உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று கூறு.
அமீருல் முஃமினின் என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) விசுவாசிகளுக்கு (ஆட்சித்) தலைவனல்லன்.
மேலும், (அன்னை ஆயிஷா - ரலி - அவர்களிடம்) 'உமர் தம் இரண்டு தோழர்கள் (நபி - ஸல் - மற்றும் அபூ பக்கர் - ரலி - அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களின் அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார்' என்று சொல்' எனக் கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களிடம் உமர்(ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா(ரலி) (உமர் - ரலி அவர்கள் குத்தப்பட்ட செய்தியறிந்து) அழுது கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அப்போது, அவர்களைப் பார்த்து, '(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் தங்களுக்கு சலாம் கூறுகிறார்.
தம் இரண்டு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்' என்று கூறினார். அப்போது ஆயிஷா(ரலி), 'எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன்.
(இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னை விட அவருக்கே முதலிடம் கொடுத்து விட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுங்கள்)' என்று கூறினார்கள். பிறகு அவர் (உமர் - ரலி - அவர்களிடம்) திரும்பி வந்தபோது, 'இதோ, உமர் அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்' என்று கூறப்பட்டது.
(ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர்(ரலி), 'என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்' என்று கூறினார்கள்.
அப்போது (அங்கிருந்த) ஒருவர் தன்னோடு அவர்களை அணைத்துக் கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர்(ரலி) (தம் மகனை நோக்கி), 'உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?' என்று கேட்டார்கள். 'நீங்கள் விரும்பியது தான், அமீருல் முஃமினின் அவர்களே அன்னை ஆயிஷா (ரலி) அனுமதித்துவிட்டார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.
(அப்போது) 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதுதான் எனக்கு கவலையளித்துக் கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.)
நான் இறந்துவிட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டு செல்லுங்கள்.
பிறகு, ஆயிஷா அவர்களக்கு நீ சலாம் சொல்லி, (அவர்களிடம்) உமர் இப்னு கத்தாப் தம் இருதோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில் அனுமதி கேட்கிறார்' என்று (மீண்டும் ஒரு முறை) சொல்.
அவர்கள் அனுமதித்தால்,
என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (மண்ணறைகள் அமைந்திருக்கும் பொது) அடக்கலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்று விடுங்கள்' என்று கூறினார்கள்.
பின்னர் அவர்கள் அன்னை ஆயிஷா ரலி அவர்கள் வீட்டிலே நபியவர்களுக்கும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கும் அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது வரலாறு..
இந்த சம்பவத்தில் நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது .
நமக்கு இவ்விடத்தில் பெற வேண்டியது
நாட்டின் ஜனாதிபதி, அமீருல் முஃமினின் பல மைல் சதுர பரப்பளவின் நீதமிகு ஆட்சியாளர் ஒரு இடம் பெறும் விஷயத்தில் எவ்வளவு பேணுதலை கடைபிடித்துள்ளார்கள்..
இன்று சாதாரண பதவியோ பணபலமோ, ஆள் அதிகாரமோ கிடைத்தால் அவர் சொல்வதுதான் சட்டம், அவர் தேர்வு செய்வதுதான் அவர் இடம் என்ற அளவில் நம் சமுதாய மக்களிடையே பேணுதலை பற்றி உண்டான எந்த கவலையும் இல்லாமல் வாழ்கிறோமே...
சிந்திக்க கடைப்பட்டுள்ளோம்.
பிள்ளைகளின் வளர்ப்பில் பேணுதலை வளர்த்த சஹாபி
ஹழ்ரத் அபூதுஜானா (ரலி) அவர்கள் பஜ்ர் தொழுதவுடன் தமது வீட்டிற்கு சென்று விடுவார்கள்.இதைக் கவனித்து வந்த நபி (ஸல்) அவர்கள் அபூதுஜானவை அழைத்து “உமக்கு இறைவனின் எந்தத் தேவையும் இல்லையா? என்று கேட்பார்கள்.
அதற்கவர் “யாரசூலல்லாஹ் இறைவனிடம் எனக்கு நிரம்ப தேவைகள் இருக்கிறது” என்றார்.
அப்படியானால் உமது தேவைகளை இறைவனிடமிருந்து கேட்டுவிட்டு போகாமல், தொழுதவுடன் வீட்டிற்கு சென்று விடுகிறீரே! என்று நபியவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அபூதுஜானா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“யாரசூலல்லாஹ் ! என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பேரீத்த மரம் நிற்கிறது.
அந்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் படர்ந்து நிர்ப்பதால், அதன் பழங்கள் என் வீட்டில் உதிர்ந்து விடுகிறது.
அவைகளை என்னுடைய பிள்ளைகள் எடுத்து புசித்து விடுகிறார்கள். அது அன்னியன் உடமை, அவைகளை என் குழந்தைகள் சாப்பிட்டு விடுவதால் ஹராமான (விலக்கப்பட்ட) பொருளை உண்டவர்களாகி விடுகிறார்கள். ஆதலால் நான் தொழுதவுடன் வீட்டிற்க்குச் சென்று என் பிள்ளைகள் கண் விழிப்பதற்கு முன் அப்பழங்களை எடுத்து அவர் வீட்டில் போட வேண்டியதாயிருக்கிறது: அதனால்தான் நான் ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்க்குச் சென்று விடுகிறேன் என்றார்கள்.
ஹழ்ரத் அபூதுஜானா (ரலி) அவர்களின் நேர்மையையும், பேணுதலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் இதற்கொரு சரியான பரிகாரம் காண முயற்சித்தார்கள். அந்த மரம் இருந்ததோ ஒரு “முனாபிக்” (முஸ்லிமை போல் நடிக்ககூடியவர்) வுடைய வீட்டில். இறுதியில் அந்த மரத்தை அபூதுஜானாவுக்கே சொந்தப் படுத்திக் கொடுத்துவிட முடிவு செய்யப்பட்டது.
நபி (ஸல்)அவர்கள் ஒரு ஸஹாபியை மரச் சொந்தக்காரரிடம் அனுப்பி, அடுத்த வீட்டுக்காரார் அபுதுஜானாவுக்கு மரத்தை விற்றுவிடும்படி சொல்லுங்கள் என அனுப்பினார்கள்.
அதற்கு அந்த முனாபிக் முடியாது என்று சொல்லிவிட்டார்.
இரண்டாவது தடவை நபியவர்கள் தங்களுக்கே விலைக்கு தரும்படி கேட்டனுப்பினார்கள். அதற்கும் அந்த முனாபிக் முடியாது என சொல்லிவிட்டார்.
மூன்றாவது தடவையாக சுவர்க்கத்தின் ஒரு மரத்திற்கு பகரமாக தரும்படி கேட்டனுப்பினார்கள். அதற்கும் முடியாது என்றே பதில் வந்தது.
கடைசியாக மதினாவில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு தோட்டத்திற்கு பகரமாக அவர் வீட்டு முற்றத்தில் நிற்கக்கூடிய அந்த ஒரு மரத்தை மட்டும் தரும்படி கேட்டனுப்பினார்கள்.
பேராசைக்கொண்ட அந்த முனாபிக் “ஒரு மரத்திற்குப் பதில் பத்து மரங்கள் கிடைக்கிறது. இந்த ஒரு மரமும் நமது வீட்டில்தான் நிற்கிறது. எனவே இரவோடு இரவாக வீட்டிலுள்ள மரத்தின் கனிகளையும் நாமே பரித்துகொள்ளலாம். வெளியுலுள்ள மரங்களின் கனிகளும் நமக்கு கிடைக்கும்”. என்று தம் மனதிற்குள் நினைத்தபடி நபியவர்களின் கடைசி கோரிக்கைக்கு இணங்கினார். ஒப்பந்தப்படி தம் வீட்டு முற்றத்திலுள்ள மரத்தை அபூதுஜனாவுக்கே விற்று விட்டார்.
அடுத்த நாள் காலையில் மரம் அபூதுஜானவுடைய வீட்டு முற்றத்தில் நிற்பதைக் கண்டு முனாபிக் திடுக்கிட்டார். (நூல்:தப்ஸீருல் பஹவி)
இச்சம்பவத்தில், ஒரு தந்தை தன் பிள்ளைகளுடைய வளர்ப்பில் ஹலால் எது? ஹராம் எது? என்று பேணுதலோடு வாழ சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார்கள் என்று தெரிய வருகிறது
ஆக பேணுதலை வளர்க்க பேணுதலான வாழ்க்கையை வாழ அவர்கள் எடுத்து கொண்ட சிரமங்களும் சீரான நடைமுறைகளும் எப்படிப்பட்டது என்பது மேற்காணும் சம்பவங்கள் நமக்கு அழகான எடுத்துக்காட்டுகள்.
ஆக பேணுதலான வாழ்க்கையை வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் பேரின்பத்தை பெரும் நன்மக்களாக நம் அனைவரையும் வல்ல ரஹ்மான் ஆக்கி அருள்புரிவானாக..
ஆமீன்..