Wednesday, 4 November 2020

06/11/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- நானிலம் போற்றும் நாயகத்தின் நற்குணங்கள்


 الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على رسول الله المرسلين وعلى اله وصحبه اجمعين، اما بعد، قال الله تعالى في القران العظيم، والقران المجيد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، (وانك لعلى خلق عظيم)، صدق الله العظيم

 و قال النبي صلى الله عليه وسلم، فقد صح عنه عليه الصلاة والسلام من حديث أبي هريرة رضي الله عنه أنه قال: (إنما بعثت لأتمم مكارم الأخلاق)

கண்ணியமானவர்களே!

இந்த உம்மத்தின் சிறப்புகளில் ஒன்று இறுதி உம்மத், இறுதி நபியின் பல்வேறு வாழ்க்கை குறிப்புகளில் மிக முக்கியமானது, நற்குணத்தின் மொத்த உருவம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

நபியவர்கள் எத்தனையோ அற்புதங்களை காட்டினார்கள், அப்போதெல்லாம் அதிகமான நபர்கள் ஈமான் கொள்ளவில்லை.

நபியவர்கள் எத்தனையோ மனிதர்களுக்கு தானாக சென்று உபதேசம் செய்தார்கள், ஆனால் அதிகமான நபர்கள் ஈமான் கொள்ளவில்லை.

நபியவர்கள் காலத்தில் சில போர்களும் நடந்தது, அதில் கூட அதிகமான நபர்கள் ஈமான் கொள்ளவில்லை.

ஆனால் நபியவர்கள் எப்பொழுது தன் நற்குணத்தை வெளி காட்டினார்களோ, அப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின் பக்கம் இணைந்தார்கள்.

நற்குணத்தை பரிபூரணமாக்குவதற்கு தான் நான் அனுப்பப்பட்டேன். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

عن انس رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم كان يزور الأنصار، ويسلم على صبيانهم، ويمسح رؤوسهم [رواه النسائي وصححه الالباني]

ஹஜரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய தோழர்களை சந்திப்பவர்களாகவும் , சிறுவர்களுக்கு ஸலாம் கூறுபவர்களாகவும் இன்னும் அவர்களுடைய தலையை (அன்பாக) தடவி விடுபவர்களாகவும் இருந்தார்கள்.


"பணியாளர்களிடத்தில் அவர்கள் நடந்துகொண்ட முறை போற்றுதலுக்குரியது"

பணியாளர்களை அடிமைகள் போல் நடத்திய அந்த காலத்தில் நபி(ஸல்) அவர்கள் "பணியாளர்களின் வியர்வை உலரும் முன் அவர்களின் கூலியைக் கொடுங்கள்" என்று பணியாளர்களின் உரிமைகளை பிரகடனப்படுத்தினார்கள். பணியாளர் வேலை செய்ய மறுக்கும்போது கூட கடிந்து கொள்ளவில்லை, வார்த்தைகளால் காயப்படுத்தவில்லை மென்மையைக் கொண்டே அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். அனஸ்(ரலி) அவர்கள் சொல்வார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கரத்தைவிட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒருபொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை. அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இன்னும் 'பணியாளரின் குற்றங்களை எத்தனை தடவை மன்னிப்பது?' என்று ஒருவர் மூன்று முறை கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொரு நாளும் எழுபது தடவை மன்னித்து வாரும்' என்றார்கள்.

ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி

இவ்வாறு கருணையே உருவான காருண்ய நபி(ஸல்) அவர்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் நற்குண வடிவாய் திகழ்ந்தார்கள்.


"மனைவிமார்களிடமும், வீட்டிலும் எப்படி நடந்து கொண்டார்கள்."

ஒரு ஆணுக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய, இன்னும் அந்த ஆணை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் அறியக்கூடியவர் மனைவிதான், அந்த ஆணின் குணத்தைபற்றி அறிந்துக்கொள்ள உதவும் முதல் உறைக்கல்லாவார்கள். 'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவ்வாறே, தாம் சொன்னதற்கு ஏற்ப தமது மனைவிமார்களை துணைவியாகவும், தோழியாகவும்தான் நடத்தினார்களே தவிர அடிமைகளாகவோ, வேலைக்காரிகளாகவோ நடத்தவில்லை. வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள், தமது கிழிந்த ஆடைகளைத் தைப்பார்கள், பழுதுபட்ட தமது செருப்பை சரி செய்வார்கள். இன்னும் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள் என்பதை பல ஸஹீஹான ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகிறது. புகாரி 676, 5363, 5190 முஸ்னத் அஹ்மத் 23756, 24176 அபூதாவூத் 2214.

عن عن انس بن مالك رحمه الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس خلقاً [متفق عليه]

ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

மக்களிலேயே மிகவும் அழகிய நற்குணம் உடையவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள்.

عن عروة رضي الله عنه قال سالت عائشة رضي الله عنها: ما كان النبي صلى الله عليه وسلم يصنع إذا خلاً ؟ قالت: يخيط ثوبه، ويخصف نعله، ويصنع ما يصنع الرجل في أهله [رواه احمد وصححه الالباني]

ஹஜ்ரத் உர்வா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :நான் ஹஜ்ரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனியாக வீட்டில் இருக்கும் போது என்ன வேலை செய்வார்கள் ? ஹஸ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வீட்டில் இருக்கும் போது தங்களுடைய ஆடைகளை தைப்பார்கள் இன்னும் தங்களுடைய செருப்பை தைப்பார்கள் மேலும் ஒரு மனிதர் தன்னுடைய வீட்டில் என்னென்ன வேலைகள் எல்லாம் செய்வார்களோ அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் (வீட்டில் வேலை) செய்வார்கள்.


"உணர்வுக்கு மதிப்பளித்த உயர்ந்த குணம் படைத்த நபி"

சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அவர்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அது மார்க்கத்திற்கு முரணாக இல்லாத போது அதை நிறைவேற்றி வைப்பது சிறந்த பண்பாகும். இதை நபிகளார் அவர்கள் செய்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

2102 – حَدَّثَنِى هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِىُّ وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى – وَاللَّفْظُ لِهَارُونَ – قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرٌو أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ

دَخَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَعِنْدِى جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثٍ فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ فَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِى وَقَالَ مِزْمَارُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ « دَعْهُمَا » فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَإِمَّا قَالَ « تَشْتَهِينَ تَنْظُرِينَ ». فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِى وَرَاءَهُ خَدِّى عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ « دُونَكُمْ يَا بَنِى أَرْفَدَةَ ». حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ « حَسْبُكِ ». قُلْتُ نَعَمْ. قَالَ « فَاذْهَبِى

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, உனக்கு போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.

அறி: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி (950)

2101 – وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ أَخْبَرَنِى ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ

وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِى – وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِى مَسْجِدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- – يَسْتُرُنِى بِرِدَائِهِ لِكَىْ أَنْظُرَ إِلَى لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِى حَتَّى أَكُونَ أَنَا الَّتِى أَنْصَرِفُ. فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க, பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்!

அறி: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 5236

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தோள் கொடுத்து நின்று, பார்க்கச் செய்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

இன்று நாம் நம் வீட்டார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கிறோம் என்பதை சிந்தனை செய்ய கடமைபட்டுள்ளோம்..


"இறைவனுக்கும், இறை தூதருக்கும் பிரியமானவர்"

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது சில மக்கள் வந்து, அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவர் யார்? என்று கேட்டனர். அதற்கு குணத்தால் சிறந்தவரே! என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். உஸாமா பின் ஷரீக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸல் தபரானியில் உள்ளது.

உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்க அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றதும் உங்களில் நற்குணமுடையவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது ( நூல்: அஹ்மத்)


"மக்களோடு மக்களாகவே வாழ்ந்த நபி"

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நாயகம் அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.என்று விடையளித்தார்கள்.

நூல்: அபுதாவுத் 3773, பைஹகீ 14430

இன்று கொஞ்சம் பொருளாதாரததில் உயர்ந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்து அடையாளம் காணப்படுகிறோம்.


"முந்திய வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள முத்து நபியின் நற்குணம்"

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைச் சந்தித்து, தவ்ராத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்! என்றேன்.

​​அவர்கள், இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களுடைய சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியம் அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் எனது அடிமையும் எனது தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்! இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில் அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்! வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாதவரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும் என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது! என பதிலளித்தார்கள் என அதா பின் யஸார் அவர்கள் கூறினார்கள்.

​​நூல்: புகாரி 2125,மேலும் பார்க்க புகாரி 6024, 3560, 6033, முஸ்லிம் 4585, 4848, 4849


"கோபத்தை அடக்குவது, கட்டுப்படுத்துவது ஒரு மிகப் பெரிய குணமாகும்"

இதன் சிறப்பை பேசுவது மிக இலகுவானது. ஆனால் நடைமுறையில் கொண்டு வருவது மிகக் கடினம். ஆனால் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்த குணம் ஊறிப் போயிருந்தது.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை புதல்வி ஜைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்காவிலிருந்து ஒட்டகத்தில் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஹப்பார் இப்னு அஸ்வத் என்பவன் இந்த அளவு வேகமாக ஈட்டியால் அடித்தான்,இதனால் ஹஜ்ரத் ஜைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். அவர்களுடைய கர்ப்பம் கலைந்து விட்டது. இந்த தூக்கம் தாளாமல் சிறிது நாட்களில் மரணமானார்கள். இந்த செய்தி அறிந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் கோபமானார்கள். மேலும் துக்கமடைந்தார்கள். எப்பொழுதெல்லாம் இந்த சம்பவம் ஞாபகம் வருமோ, அப்பொழுதெல்லாம் அழுதுவிடுவார்கள். ஆனால் எப்பொழுது ஹப்பார் இப்னு அஸ்வத் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே மன்னித்தார்கள்.

இதை போன்று வஹ்ஷி இப்னு ஹர்ப் உஹத் உடைய போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிரியமான சிறிய தந்தை ஹஜ்ரத் ஹம்ஜா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஷஹீதாக்கியவர். இதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. எனினும் வஹ்ஷி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் சமூகத்திற்கு வந்த பொழுது அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் வஹ்ஷி அவர்களிடம் ஹம்ஜா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொலை செய்த முறையை கேட்டார்கள். வஹ்ஷி அவர்கள் அதை விளக்கிய பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுதுவிட்டார்கள். மேலும் சொன்னார்கள், வஹ்ஷி! உன்னுடைய குறைகள் மன்னிக்கப்பட்டுவிட்டன. எனினும் எனக்கு முன்னால் வராதீர்கள். உங்களை பார்த்தால் என்னுடைய பிரியமான சிறிய தந்தை ஷஹீதான ஞாபகம் வருகிறது என்றார்கள்.

தங்களுடைய மகள் இறப்பதற்கு காரணமாக இருந்தவர், பிரியமான சிறிய தந்தையை கொன்றவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்ட ஒரே காரணத்தினால் தன்னுடைய கோபம், வெறுப்பு, துக்கம் எல்லாவற்றையும் மறந்து மன்னிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் உயர்ந்த குணத்தின் காரணமாக செய்தார்கள்.

இதை போன்ற சம்பவங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல வரலாற்றில் குவிந்து கிடக்கின்றன.


"உலகத்தில் எத்தனையோ பேர் நற்குணங்களை, நல்ல தன்மைகளை போதித்துள்ளார்கள். ஆனால் அந்த குணங்களை, தன்மைகளை தங்களுடைய வாழ்க்கையில் எடுத்து நடந்தவர்கள் மிக சொற்ப நபர்களே காணக் கிடைப்பார்கள்"

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய போதனைகளை முழுமையாக தங்களுடைய வாழ்க்கையில் எடுத்து நடந்தார்கள். யாராலும் இதில் குறை காணவே முடியாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தவொரு நன்மைக்குரிய செயலாக இருந்தாலும், அதை செய்வதில் எல்லோருக்கும் முன்னால் இருப்பார்கள்.

மக்கா வெற்றியின் சமயம் கஃபாவின் முற்றத்தில் குறைஷிகளின் பெரும், பெரும் தலைவர்கள், இஸ்லாத்தை அழிப்பதற்கு கடுமையாக ஓடியவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கல் எறிந்தவர்கள், திட்டியவர்கள், கடுமையான வார்த்தைகளில் சாடியவர்கள், கொலை செய்ய துடித்தவர்கள், ஸஹாபாக்களை சித்திரவதை செய்தவர்கள் எல்லோரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின் பத்தாயிரம் வீரர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை எதிர்பார்த்து ஆயுதங்களுடன், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?

உலகத்தாருக்கு தங்களின் நற்குணத்தின் சான்றை நிருபித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசிகளை முன்னோக்கி சொன்னார்கள். குறைஷிகளே! இன்று நான் உங்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் சொன்னார்கள். நாங்கள் நல்ல விஷயத்தை ஆதரவு வைத்துள்ளோம். நீங்கள் கண்ணியமான சகோதரராக இருக்கிறீர்கள். மேலும் சங்கைக்குரிய சகோதரரின் மகனாக இருக்கிறீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நான் உங்களுக்கு யூஸுப் (அலை) அவர்கள் தங்களுடைய சகோதரர்களுக்கு சொன்னதை போலவே சொல்கிறேன்.

  ”لا تثریب علیکم الیوم اذہبوا فانتم الطلقاء“

"இன்று உங்களின் மீது எந்த பழிவாங்குதலும் இல்லை. செல்லுங்கள்! நீங்கள் எல்லோரும் சுதந்திரமானவர்கள்". 

இதை போன்ற நற்குணத்திற்கு சான்றை இன்று வரை, இல்லையில்லை கியாமத் நாள் வரை உலகம் காட்டுவதற்கு சாத்தியமேயில்லை.


"பொற்குண நபியின் நற்குணங்களை சொல்லி முடிக்க காலம் போதாது"

எப்பொழுதும் குப்பையை கொட்டும் பெண்மணி சில நாட்களாக வரவில்லை என்றதும், விசாரித்தார்கள் நபி, அந்த கிழவிக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் நோய்விசாரிக்க சென்ற நபியின் குணம் எங்கே ..?

பக்கத்து வீட்டானின் குப்பை நம் வீட்டு பக்கம் வந்தால் நம் நிலை மாறும் நம் குணம் எங்கே..?

நுபவ்வத்திற்கு முன் அபு ......

என்பவர் நபியிடம் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்தார்.

ஒரு நாள் பணம் தர ஒரு இடத்தில் நிற்க வைத்து சென்றவர் மறந்து மூன்று நாட்கள் கழித்து நினைவு வர வாக்குறுதி தவறாத வள்ளல் நபி அங்கேயே நின்றிருந்தார்கள் .

வந்தவர் மன்னிப்பு கேட்டார் "என்னை கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டீரே" என்ற ஒரு சொல்லோடு நபி அவர்கள் திரும்பிய நிகழ்வு உலகில் எவராலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை நமக்கு சொல்லி காட்டுகிறது.

குழந்தையின் அழுகைக்காக இபாதத்தை சுருக்கிய நபியின் குணம், குழந்தை அழுதால் எரிச்சல் கொண்டு முகம் மாறும் நமக்கு உயர்ந்த படிப்பினை

இவ்வாறுஏராளம் ஏராளம் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் குணங்களில் அழகானவர்களாவே திகழ்ந்தார்கள் சலல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

இது போன்று நாமும் நபியுடைய முழு வாழ்க்கையையும் பேணி நடப்பதற்கு அல்லாஹ் தௌபீக் செய்வானாக!

3 comments:

  1. Miha arumaiyana vidhayam but sambavam iruntal inum nalla irukkum allahu ungaluku nalla koolikalai valangguvanaga ameen

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறோம்

      Delete

08/01/2021 ஜூம்ஆ குறிப்புகள்:- பேனுதலை கடைப்பிடிப்போம், பேரின்பத்தை பெற்றுக்கொள்வோம்

பேணுதலை கடைபிடிப்போம், பேரின்பத்தை பெற்றுகொள்வோம் أخرجه الترمذي (2442) ، وأحمد (1630) ، وابن حبان (722) عن الحسن بن علي رضي الله...