Thursday, 12 November 2020

13/11/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- உலக மக்களுக்கான நபியின் இறுதி பேருரை

الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فقال الله تعالى في القران العظيم والقران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ‏
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 33:21)

عن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال: ((بلِّغوا عني ولو آية، وحدِّثوا عن بني إسرائيل ولا حرَج، ومَن كذب عليَّ متعمِّدًا فليتبوَّأْ مقعدَه من النار))؛ رواه البخاري.

நபி தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


பேச்சின் இறுதியில் மக்களை நோக்கி இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.

கண்டிப்பாக ஒவ்வொரு முஃமினும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உலக அமைதிக்கான ,சமாதானத்தின் அடித்தளமாக அமைந்த உரை..

"இறுதி நபியின் இறுதி உரை"


வட்டி, விபச்சாரம், கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் மிக பாரதூரமானவை என்று விளங்கியுள்ள இந்த முஸ்லிம் சமுதாயம், பிறருடைய மானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கிறோம். ஆனால் அது மறுமையில் மிகப் பெரிய பாவமாக வந்து நிற்கும் என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது. நபியின் இறுதிப் பேருரையில்….

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْخَلاَّلُ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِىٍّ الْجُعْفِىُّ عَنْ زَائِدَةَ عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ حَدَّثَنَا أَبِى
أَنَّهُ شَهِدَ حَجَّةَ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَذَكَّرَ وَوَعَظَ ثُمَّ قَالَ « أَىُّ يَوْمٍ أَحْرَمُ أَىُّ يَوْمٍ أَحْرَمُ أَىُّ يَوْمٍ أَحْرَمُ ».قَالَ فَقَالَ النَّاسُ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَا رَسُولَ اللَّهِ.قَالَ « فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِى بَلَدِكُمْ هَذَا فِى شَهْرِكُمْ هَذَا


"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!"

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா, 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

இன, நிற அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது என்பதை அறிவோமில்லையா? அதை அழுத்தமாகப் பதிய வைக்கும் நிகழ்வொன்று நடந்தது. முஸ்லிம்களின் முதல் முஅத்தின் என்ற பெருமை தோழர் பிலாலுக்குத்தான் அமைந்தது.

தொழுகைக்கு மக்களை அழைக்க பாங்கு வாசகங்கள் முடிவானதும் மதீனாவில் தம்முடைய மஸ்ஜிதில் பாங்கு சொல்லும் உன்னதப் பணிக்கு நபியவர்கள் பிலாலை நியமித்தார்கள். அவருக்குத் துணையாளர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்

என்று ஒவ்வொரு தொழுகைக்கும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அழைப்பு விடுத்து, விடுத்து, அவரது இனிய குரல் மதீனாவிலும் தோழர்கள் மத்தியிலும் எந்தளவிற்குப் பிரசித்தமானது என்றால், பாங்கோசை என்றால் அது பிலால் என்றாகிப்போனது. இன்றும் உலகின் சில பகுதிகளில், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் முஅத்தின்களை அறிமுகமில்லாத எவரேனும் சந்தித்து, ‘என்ன தொழில் செய்கின்றீர்கள்?’ எனக் கேட்டால் ‘மஸ்ஜிதில் பிலால் ஆக இருக்கின்றேன்!’ என்று பெருமையுடன் குறிப்பிடுமளவிற்குப் புகழ் பெற்றுவிட்டது அவரது பெயர்.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று கஅபாவின் கூரையின்மீது ஏறி நின்று பாங்கு சொல்வதற்கு நபியவர்கள் பிலாலைத்தாம் பணித்தார்கள். அவரது பாங்கொலி மலைக்குன்றுகளில் முட்டி எதிரொலித்தது. குன்றுகளிலும் உயர்ந்த இடங்களிலும் ஓரமாக ஒதுங்கி, தொங்கிய முகங்களுடன் கஅபாவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிகளுக்கு அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. இது கனவா, நனவா? புழுதியில் கிடத்தப்பட்டு, புழுவாக நசுக்கப்பட்ட அந்தக் கறுப்பர் இன்று நம் புனிதக் கருங்கல் ஆலயத்தின் உச்சியில் நின்று உரத்து உரைத்துக் கொண்டிருப்பது விதியா, விசித்திரமா? உயிர் பிரிந்து விடுமோ என்று கிடந்த நிலையில் ஈனஸ்வரத்தில் அன்று அவர் முனகிய வார்த்தைகளை இன்று அந்தக் கஅபாவின் கூரையில் நின்று உச்சபட்ச ஒலியில் ஓங்கி ஒலிப்பது தற்செயலாக இருக்க முடியுமா?

அன்றைய நாள் அத்தனைத் தோழர்கள் அங்குக் குழுமியிருக்க, நபியவர்கள் கஅபாவின் உள்ளே நுழையும்போது தம்முடன் உஸாமா பின் ஸைத், உஸ்மான் இப்னு தல்ஹா ஆகிய இருவரோடு மூன்றாமவராக பிலால் இப்னு ரபாஹ்வையே அழைத்துச் சென்றார்கள்.

இத்தகு நற்பேறெல்லாம் எப்படித் தற்செயலாக மட்டும் இருக்க முடியும்? சித்திரவதையின் உச்சக்கட்டத்தின் போது, உயிர் பிரிந்துவிடும் சாத்தியமிருந்தும் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், இணங்கிவிடாமல், ஏகத்துவத்தை உரத்து உரைத்த தன் அடிமைக்கு அந்த ஏக இறைவன் இவ்வுலகில் அளித்த நற்பேறல்லவா இது! ‘லாத், உஸ்ஸா’ என்ற எந்தச் சிலைக்கும் போலி பாவனையில்கூட வாழ்த்துச் சொல்லாமல், ‘அஹதுன்! அஹதுன்! என்று அடிபட்டுக் கிடந்த அவரின் வரலாற்றில் இன்றைய நமக்கு நிறைய பாடமல்லவா உள்ளது.

இம்மையிலேயே அவருக்கு இத்தகு பேறு என்றால் மறுமையில்? அது அளவற்றது என்பதை உணர்ந்து கொள்ள பிலாலின் காலடியோசையைத் தாம் சொர்க்கத்தில் கேட்டதாக நபியவர்கள் தெரிவித்துள்ள ஒரு ஹதீஸ் போதுமே!

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஃபஜ்ருப் பொழுதில், 'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்' என்று பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களுள் சிறந்த செயல்' என்று விடையளித்தார்கள் (புகாரீ 1149)

"ஒரு முஃமினின் மானம் காப்போம்"

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:

‘இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)

மனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

இறை ஆலையமான கஃபாவையும் அதைச்சூலவுள்ள புனிதப்பகுதியையும் மதிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே தன் சகோதர முஸ்லிமின் கண்ணியத்தை பேணுவதும் கடமையாகும் என்பதை நபிகளாரின் உவமை உணர்த்துகின்றது.

மக்காவுக்குச் செல்லும் முஸ்லிம்கள் ஒரே விதமான வெள்ளை ஆடை தரித்து, தங்களுக்கிடையே எந்த வித நிற, இன மொழி பேதத்தையும் ஏற்படுத்தாமல் கஃபாவை வலம் வருகின்றனர்.

சண்டை சச்சறவு இல்லாமல் பயிர் பச்சைகளைக் கிள்ளாமல் உயிர்ப் பிராணிகளை வேட்டையாடாமல் அதன் புனிதத்துவத்தை மதிக்கின்றனர்.

இவ்வாறு மக்கா நகரத்தின் புனிதத் தன்மையை மதிக்கும் கணிசமான முஸ்லிம்கள், தன் சகோதர முஸ்லிமின் மானம், மரியாதை விடயத்தில் அக்கரை செலுத்துவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் தூங்கும் போது கிப்லாவை நோக்கி கால்களைக் கூட நீட்டக் கூடாது(?) என எள்ளை கடந்து அதன் புனிதத்தை மதிக்கும் முஸ்லிம்கள் தன் சகோதர முஸ்லிமின் மானம் மரியாதைவிடயத்தில் கால் தூசு அளவு கூட அக்கறை செலுத்துவதில்லை.

காரணம் மக்கா நகரத்தின் புனிதத்தை உணர்ந்த இவர்கள், மனிதனின் கண்ணியம் எவ்வளவு புனிதமானது என்பதை உணரவில்லை. அல்லது அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.

ஒரு முஸ்லிமின் கண்ணியத்திலும் மானம் மரியாதையிலும் அத்து மீறுவது மக்கா நகரத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்கு ஈடாகும் என்பது இந்த நபி மொழியின் சாறமாகும்.

எனவே, இதயத்தில் ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் தனது சகோதர முஸ்லிமின் மான மரியாதையில் விளையாடத் துணிய மாட்டான்.
மானம் உயிரை விட புனிதமானது

யார் தன் பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன்னைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். ‘என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பர: ஸஈத் இப்னு சைத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதி 4772, நஸாஈ 4095)

இஸ்லாம் எந்தளவு மனிதனின் மானத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு இந்த நபி மொழி சிறந்த எடுத்துக்காட்டாகும்.

"ஒரு முஸ்லிம் தன்னுடைய மானம்மரியாதையை தன் இந்நுயிரை விட மேலாக மதிக்க வேண்டும்"


ஒரு முஃமின் எந்நிலையிலும் தன் மானத்தை இழந்து விடக்கூடாது. தன் மானம் பறிபோக நேறிட்டால் அதற்காக சண்டையிட்டாவது தன் கண்ணியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். அந்தச்சண்டையில் அவர் கொள்ளப்பட்டாலும் சரிதான்.அவருக்கு ஷஹீதின் நன்மை கிடைக்கும் என இஸ்லாம் கூருகின்றது. ஒரு மனிதனின் மானத்தில் கை வைப்பது அவனை கொலை செய்ததற்கு நிகரான குற்றம் என்பதை இந்த நபி மொழி உணர்த்துகின்றது.

இதிலிருந்து மானமிழந்து மறியாதையற்று நடைப்பினமாக வாழ்வதை விட கண்னியத்தோடு மாழ்வதயே இஸ்லாம் வரவேற்கின்றது என்பதை அறியலாம்.

"மானத்தில் கை வைப்பது கொலைக்கு நிகரான குற்றம்"

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்.அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ அவருக்குத் துரோகமிழைக்கவோஅவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக் குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றவரின் உயிர் பொருள் மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 5010)

ஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விவகாரத்திற்கும் கொடுத்துள் ளார்கள்.

"அகபாவில் ஓர் உடன்படிக்கை"

மனிதனின் கன்னியத்திற்கு இஸ்லாம் எந்தளவு கவனம் செலுத்தியுள்ளது என்பதற்கு அகபாவில் நடந்த உடன்படிக்கை சிறந்த சான்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரில் ஏகத்துவப்பிரச்சாரத்தை முடுக்கி விட்டதினால் பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும் ஆளானார்கள் தன் தாய் நாட்டை துறக்குமளவு சோதனைகள் பல அவரைச்சூள்ந்தன.

இந்த நிலையில் மதீனாலிலிருந்து மக்காவுக்கு வருகை தந்த சில மதீனா வாசிகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மதீனாவில் அடைக்கலம் தருவதாக வாக்களித்தனர்.இதை யொட்டி அகபா எனும் பல்லத்தாக்கில் அவர்கள் இரகசியமாக அண்ணலாரைச் சந்தித்து அவரின் திருக்கரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து இஸ்லாத்தை ஏற்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த முக்கியமான நிகழ்ச்சியில் முக்கியமான சில ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டன.அந்த ஒப்பந்தங்களில் மனிதனின் மானம்மரியாதை குறித்தும் பேசப்பட்டது உயிருக்கு ஆபத்தான இக்கட்டான நேரத்தில் கூட நபிகளார் மனிதனின் மானம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்கள் என்றால் மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

இதை புகாரியில் பதிவாகியுள்ள பின்வரும் செய்தி உணர்த்துகின்றது

பத்ருப்போரில் கலந்து கொண்டவரும் இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும்இ திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும் உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும்இ நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும்இ எந்த நல்ல காரியத் திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்ற சொன்னார்கள்.உடனே நாங்கள் அவற்றுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். (பார்க்க: புஹாரி :18) 


இன்னும் சொல்லப் போனால் மாஇஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் விபச்சாரக் குற்றத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொண்டு அதற்குரிய தண்டனையை வழங்கக் கோரிய மூன்று சந்தர்ப்பங்கிலும் அவரின் மானத்தின் புனிதம் கருதி அவரின் இருண்ட விவகாரத்தை வெளிச்சப்படுத்தாமல் அவரை தண்டிக்காது திருப்பி அனுப்பிவைத்தார்கள் நபிகள் நாயகம்.நான்காவது தடைவ அவரே முன் வந்து அதற்குரிய தண்டனையைப் பெற்று இவ்வுலகிலேயே தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டார். (பார்க்க : அபூ தாவுத் : 4421)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முஃமினின் மானத்தை எனதளவு புனிதமானதாக கருதியுள்ளார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த எடுத்துக் காட்டாகும்.இது போன்று இன்னும் பல சம்பவங்கள் நபிகளாரின் காலத்தில் நடந்தன என்பதற்க்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.

"தலைமைக்கு கீழ் படுவீர்"

மக்களேகளே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி, 1706)

"அராஜகம் செய்யாதீர்கள்!"

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.

(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

"பணியாளர்களைப் பேணுவீர்!"

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

*அநீதம் இழிக்காதீர்கள்.*

"வாரிசுரிமை சட்டங்களில் இறை விதிகளை மீறாதீர்கள்"


"உரிமைகளை மீறாதீர்!"

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

"முறைதவறி நடக்காதீர்!"

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) 

"பெண்களை மதிப்பீர்!"

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

"இரண்டைப் பின்பற்றுவீர்!"

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

"எச்சரிக்கையாக இருப்பீர்!"

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.

(ஸஹீஹ்ல் புகாரி 4402)

"சொர்க்கம் செல்ல வழி!"

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

"குற்றவாளியே தண்டிக்கபடுவார்!"

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.

(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

"உரிமைகளை மீறாதீர்"

"கணவன் மனைவியின் உரிமைகளை பேணி வாழுங்கள்"

"நிறைவான முஃமினஆக இருங்கள்"

"சிறுசிறு வணக்கங்களில் அலட்சியம் செய்யாதீர்கள்"

"என் செய்திகளை பிறருக்கு எத்தி வையுங்கள்"


"இஸ்லாம் முழுமையாகி விட்டது!"

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

"இறுதி இறை வசனம்"


இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)

ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)


இன்னும் ஏராளமாக தன்னுடைய இறுதி பேருரையில் நபியவர்கள் ஒரு உம்மத்தின் இறுதி தலைவராக இந்த உம்மத் மட்டுமல்ல உலக மக்கள் அனைவரும் இப்படிததான் இருக்க வேண்டும் என்பதை மிக அழகாக ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள்..

இதை நம்முடைய வாழ்வியல் அம்சங்கங்களாக எடுத்து நடப்போமேயானால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற முஃமீனாக திகழ முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..


அல்லாஹ் அப்படிப்பட்ட முஃமின்களாக வாழ செய்வானாக..

ஆமீன்..

No comments:

Post a Comment

08/01/2021 ஜூம்ஆ குறிப்புகள்:- பேனுதலை கடைப்பிடிப்போம், பேரின்பத்தை பெற்றுக்கொள்வோம்

பேணுதலை கடைபிடிப்போம், பேரின்பத்தை பெற்றுகொள்வோம் أخرجه الترمذي (2442) ، وأحمد (1630) ، وابن حبان (722) عن الحسن بن علي رضي الله...